ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற தன் வாழ்வை அர்ப்பணித்த எம்.ஜி.ஆர் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் தமிழ்நாட்டில் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப் பட்டுள்ளது.
அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில், எம்எல்ஏ-க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டு, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் அதிமுகவினர், ஓபிஎஸ்- இபிஎஸ் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையே, சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர் வகுத்த கொள்கைகளை அடிபிறழாமல் கடைபிடிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
’ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற தன் வாழ்வை அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும். அவர் வகுத்த கொள்கைகளை கடைபிடிப்போம். எதிரிகளின் சூழ்ச்சிகளை வேரறுப்போம், அதிமுக மீண்டும் தலைநிமிர ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்’ என்று கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.







