மத்திய அரசின் ரேகா (REGA) திட்டத்தில் SC/ST மக்களின் கூலிக் கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் பணிபுரியும் பட்டியல் சாதி பழங்குடியினருக்கு வழங்கப்படும் கூலிக் கணக்கை தனியாக தொகுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கூலியை தனியாக வழங்குவதற்காக அரசிடம் எந்த திட்டமும் உள்ளதா, அதற்கான கணக்குகளை தனியாக பராமரிக்குமாறு அமைச்சகம் விடுத்துள்ள அறிவுறுத்தலின் பின்புலம் என்ன?, வேலை நாட்களை அதிகரிக்க திட்டம் உள்ளதா? கூடுதல் பயன் தரும் சிறப்பு திட்டங்கள் வகுப்பதற்கான முன்மொழிவு ஏதும் அரசிடம் உள்ளதா? என்ற கேள்விகளை சு.வெங்கடேசன் எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்துள்ள பதிலில், தேசிய மின்னணு நிதி நிர்வாக முறைமையின் கீழ் பெறப்படும் கூலிச் செலவினங்கள் பட்டியல் சாதி, பழங்குடி, மற்றவர்கள் என தனித்தனியாகன் 2021-22ஆம் ஆண்டில் இருந்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு அரசால் அனுப்பப்படும். இன்னும் மேம்பட்ட கணக்கு முறையை கொண்டுவரவே இது செய்யப்படுகிறது என்றும், வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
#MGNREGA திட்டம் அனைவருக்கும்
பொதுவானது. இதில் SC/ST மக்களின் கூலிக் கணக்கை தனியாக பிரிப்பது ஏன்?என்ற கேள்விக்கு, வேறு காரணங்கள் அல்ல, வெறும் கணக்கிற்காக என்கிறார் அமைச்சர்.
இது SC&ST துணைத் திட்ட நிதி ஒதுக்கீடு மீது கை வைப்பதற்காகவா?
என்ற சந்தேகம் எழுகிறது.#Rural #Economy pic.twitter.com/S9akyexMMT— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 28, 2021
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி., மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச்சட்டம் எல்லா கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும் பொதுவான திட்டம், இதில் பட்டியல் சாதி பழங்குடி மக்களின் கூலிக் கணக்கை தனி பட்ஜெட் தலைப்பின் கீழ் வகைப்படுத்த வேண்டியதன் தேவை என்ன? அவர்களுக்கென்று வேலை நாள் அதிகரிப்பு அல்லது சிறப்பு திட்டங்கள் ஏதும் புதிதாக வழங்கப்படவில்லை, வெறும் கணக்குக்காக என அமைச்சரின் பதில் தெரிவிக்கிறது. கணக்கிற்காகவா அல்லது கழிப்பதற்காகவா என்ற சந்தேகம் எழுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்சி, எஸ்டி துணைத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீது கை வைப்பதற்கான உள் நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது என குறிப்பிட்டுள்ள அவர், சாதி ரீதியான பிரிவினையை கணக்குகளில் எந்த நோக்கமும் இல்லாமல் கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.