மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை, ஜீலை 15-ம் தேதி தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிமீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, ஐதராபாத் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 28ம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்ட பணி நடைபெற உள்ளது தொடர்பாக மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக், மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். முன்னதாக மதுரை வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவில், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ குழுவினர் ஆய்வு நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ திட்ட நிர்வாக இயக்குனர் சித்திக், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்த அறிக்கை ஜீலை 15-ம் தேதி தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மதுரை மெட்ரோ திட்ட பணிகள் 30 கி.மீ., என வரையறுத்த நிலையில் 31 கி.மீ. ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்தக்கடை- திருமங்கலம் இடையே 18 ரயில் நிலையங்கள் என்பது 27 ரயில் நிலையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பணிகளால் சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது. மதுரை மெட்ரோ ரயில் பாதைகளுக்கும், உயர்மட்ட மேம்பால பாதைக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என சித்திக் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








