சென்னையில் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தைப் போக்க காவல் துறையின் சார்பில் சிக்னல்களில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது.
சென்னையில் தற்போதைய நிலவரப்படி 60 லட்சம் வாகனங்கள் உள்ளன. டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் அதிக அளவில் வாகனங்கள் உள்ளன. இதில், 85 சதவீதம் இருசக்கர வாகனங்கள். கடந்த 15 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆண்டுக்கு 10 சதவீதம் வரை வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், அந்த நேரத்தை இனிமையாக்கவும் சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரூ. 15 கோடி மதிப்பில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் 302 சிக்னல்களை இயக்கும் திட்டத்தை அமல்படுத்துவதினால் வாகனங்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க போக்குவரத்து பிரிவு முடிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இசையமமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரின் இசையமைப்பில் உருவான பாடல்கள் மற்றும் இசைக்கருவிகள் மூலம் இசைக்கப்பட்ட மெல்லிசைப் பாடல்களை ஒலிபரப்ப காவல் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் சி.சாரத்கர் கூறியதாவது: போக்குவரத்து சிக்னல்களில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையிலும், சிக்னல்களில் இதமான சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும் மெல்லிசை ஒலிபரப்பத் திட்டமிடப்பட்டது. தற்போது சோதனை முறையில் இத்திட்டம் சில இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் இருந்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்கட்டமாக 42 சிக்னல் சந்திப்புகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம் என்றார்.