மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளது.
மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என டெல்லி சென்று, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என தமிழ்நாடு அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு நேற்று டெல்லி சென்றது. தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேற்று பிற்பகலில் டெல்லி சென்றடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத் தொடர்ந்து, மாலையில் அனைத்து கட்சி பிரநிதிகளும் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி விரைந்தனர். திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜக சார்பில் பால் கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா ஆகியோர் டெல்லி சென்றனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியார் ஆகியோரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றனர். இன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து, தமிழ்நாடு அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.