ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் இன்று ஆலோசனை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன்…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 19-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால், ஊரடங்கில் வழங்கப்பட வேண்டிய கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். திரையரங்குகள், மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை கட்டுப்பாடுகளுடன் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் அளிக்கப்பட்ட தளர்வில் புதுச்சேரிக்கான பேருந்து சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கர்நாடகா, ஆந்திர மாநிலத்துக்கான நேரடி பேருந்து சேவையை தொடங்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. டீ கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்திருப்பதற்கான நேரம், இரவு 9 மணியில் இருந்து, 10 மணி வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.