எம்.பிக்கள் கூட்டம்: “மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்திற்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது” – அதிமுக

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத ,நிலையில், எதற்காக அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டம் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தொகுதி மறுவரையறை குறித்த புதிய மசோதா எதுவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத, அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், எதற்காக தமிழக முதல்வர் அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது?

கண் முன்னே நடக்கும் காவிரி- மேகதாது பிரச்சனைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரியுள்ள நிலையில், அவற்றை எல்லாம் உதாசினப்படுத்திவிட்டு இந்த அரசின் முதல்வர், எதற்காக தாக்கல் செய்யப்படாத மசோதாவிற்கு கூட்டத்தை நடத்துகிறார்?

இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லை. விவசாயிகள் கண்ணீருக்கு பதில் சொல்லாமல் இந்த அரசு நடத்தும் மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்திற்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.