பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாகச் சென்னை காவல்துறை, சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடிகை மீரா மிதுன் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார் .இதனால் நடிகை மீரா மிதுன் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சாட்சிகள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இரண்டாவது குற்றவாளியான ஷாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜாரான நிலையில்,
மீரா மீதுன் ஆஜராகவில்லை எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால், இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானர்.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், மீரா மீதுன் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், எங்கு உள்ளார் என்பதைத் தேடி வருவதாகவும், விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் எனத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 14 ஆம் தேதி நீதிபதி ஸ்ரீதேவி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.






