டெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த 3 மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றன . இதையொட்டி அவற்றிற்கு பாராட்டு மற்றும் பிரிவு உபச்சார விழா இன்று நடைபெற்றது.
CISF என சொல்லப்படக் கூடிய மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்த 3 மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றன. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்காக அவற்றின் சேவையைப் பாராட்டும் வகையில், இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துக் கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவ்விழாவில் நாய்கள் தங்களுடைய விருதைப் பெறுவதற்காக தங்கள் கைப்பிடியாளர்களுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்ததோடு, சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாய்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. பின்னர் அந்த மோப்ப நாய்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் அழைத்துச் செல்லப்பட்டு அவற்றிற்கு பிரியாவிடையும் அளிக்கப்பட்டது. இருப்பினும், அந்த 3 நாய்களில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான சோனியின் உடல்நிலை சரியில்லாததால் விழாவில் பங்கேற்கவில்லை.
மேலும், இந்த விழா தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதோடு, சுமார் 72 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1,200க்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்து வைரலாகி வருகிறது. ஓய்வு பெற்ற இந்த நாய்களை தத்தெடுப்பதற்காக டெல்லியில் உள்ள FRENDICO-SECA விடம் அவைகள் ஒப்படைக்கப்படும் எனவும், சிஐஎஸ்எஃப்-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள ராக்கி, ரோமியோ மற்றும் சோனி ஆகிய மூன்று மோப்ப நாய்களுக்கும் பாராட்டுக்கள் எனவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா