மன்னார்குடியில் கோயில் திருவிழாவில் தீ மிதித்த பெண், குழந்தையுடன் தீக் குழியில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி சத்யமூர்த்தி மேட்டுதெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மன்னார்குடி திருப்பாற்கடல் குளக்கரையில் இருந்து பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பால்குடம், காவடி, எடுத்து ஊர்வலமாக வந்து பின்னா் ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. இதனையடுத்து கோயில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தீக் குழியில் பக்தர்கள் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
அப்போது சத்ய மூர்த்தி மேட்டு தெருவை சேர்ந்த உமா என்ற பெண் தனது 5 வயதுடைய பேத்தியை இடுப்பில் சுமந்து தலையில் பால்குடத்துடன் தீக் குழியில் இறங்கிய போது கால் இடறி அந்த பெண் குழந்தையுடன் தீ குழியில் விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக குழந்தை மற்றும் பெண்ணை மீட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தை மற்றும் பெண் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
ரூபி.காமராஜ்







