புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அண்மையில், புதுக்கோட்டைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டார். தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட முதலமைச்சர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். முன்னதாக ரோஜா இல்லத்தில் தங்கியிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவிற்கு வாழ்த்து செய்தி பெறுவதற்காக, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமான் நேரில் சந்தித்தார். அப்போது மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் கட்டவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இராஜராஜகோபால தொண்டைமான் (1928 -1948) தொண்டைமான் மன்னர்களில் 9வது மற்றும் கடைசி அரசராவார். இவர் ஆங்கிலேயர்களால் தேர்வு செய்யப்பட்டு தனது ஆறாவது வயதில் முடிசூட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டைச் சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் தனது பதவிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காகக் கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரியவர் எனவும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை முன்னேற்றுகின்ற வகையில் 1974-ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார் எனத் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது’
மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்திட ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னரின் திருவுருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார் எனக் கூறியுள்ள அவர், மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்நன்னாளில், மன்னரின் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் புதுக்கோட்டை நகரில் மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.








