மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி காட்டுப்பாக்கத்தில் அதிக மழையும், நுங்கம்பாக்கத்தில் அதிக வேகத்தில் காற்றும் வீசியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (10-12-2022) அதிகாலை 12.45 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும்போது அப்போதைய நேரப்படி மாண்டஸ் புயல் கரையை கடப்பது குறித்த தகவல்களைக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புயலின் மையப் பகுதி கரையை கடந்து கொண்டிருப்பதாகவும், அடுத்த 2 மணி நேரத்திற்குள் முழுமையாக புயல் கரையை கடந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார். கரையை கடந்தபின் முதலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மாண்டஸ் புயல் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அவர் கூறினார். சென்னை மீனம்பாக்கத்தில் 103 மில்லி மீட்டர் மழையும், திருவள்ளூரில் 83 மில்லி மீட்டர், மாதவரம் 87 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக பாலச்சந்திரன் கூறினார். மாண்டஸ் புயலால் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியது பதிவாகியுள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.