மழை வந்தாலும், புயல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறின.
இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, “நேற்றிரவு 2:30 மணிக்கு மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடந்தது. நிறைய இடங்களில் மரம் விழுந்துள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மதியத்திற்குள் முழுமையான சேத விவரங்கள் தெரியவரும். நிவாரணங்கள் ஓரிரு நாளில் வழங்கப்பட நடவடிக்கை. இப்பொழுது கூட முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்” என்று தெரிவித்தார்.
மதியத்திற்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலே பாதிப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், “மழை வந்தாலும், புயல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். மாவட்டங்களின் சூழ்நிலைக்கு ஏற்பவே விடுமுறை அளிக்க முடியும்” என்று கூறினார். 205 நிவாரண மையங்களில் 9,280 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.