அரிட்டாபட்டி பாரம்பரிய உயிர்ப்பல்வகைமை தளத்திற்கான மேலாண்மை திட்டம் 3
மாதத்திற்க்குள் தயாரிக்கப்படும் என மதுரையில் தமிழ்நாடு உயிர்ப்பல்வகைமை
வாரியத்தின் செயலாளர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழகத்தின் முதல் பல்லுயிர் தளமாக
அறிவிக்கப்பட்ட அரிட்டாப்பட்டி பல்லுயிர் தளத்தின் 2 வது மேலாண்மை ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயிர்ப்பல்வகைமை வாரியத்தின்
செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர், அரசுத் துறை அலுவலர்கள், பல்லுயிர்யின
ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
193 ஹெக்டர் பரப்பளவில் 2,300 ஆண்டுகள் வரலாற்றை உள்ளடக்கிய அரிட்டாபட்டி பல்லுயிர் தளத்தில் 250 பறவையினங்கள், குளங்கள், தடுப்பணைகள் என பல்வேறு விதமான கட்டமைப்புக்களை கொண்டுள்ளன.
ஆலோசனை கூட்டத்தின் நிறைவில் தமிழ்நாடு உயிர்ப் பல்வகைமை வாரியத்தின் செயலாளர் சேகர் குமார் நீரஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரிட்டாபட்டி பல்லுயிர் தளத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. வனத்துறை, வருவாய்த்துறை,
ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில்
பங்கேற்றனர். அரிட்டாபட்டியில் 10 ஆண்டுகள் வளர்ச்சி குறித்து தொலைநோக்கு
பார்வையுடன் ஆலோசித்து வருகிறோம்.
அரிட்டாபட்டி இந்தியாவின் 36 வது பல்லுயிர் தளமாகும், அரிட்டாபட்டியில் தற்போதைய கட்டமைப்புடன் எப்படி மேம்படுத்துவது என விவாதிக்கப்பட்டது, அரிட்டாபட்டி பாரம்பரிய உயிர்ப்பல்வகைமை தளத்திற்க்கான மேலாண்மை திட்டம் 3 மாதத்திற்க்குள் தயாரிக்கப்படும், மேலாண்மை திட்டம் தயாரிப்பு பணிகள் முடிந்தது. அதை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறினார்.
-ம.பவித்ரா







