மயிலாடுதுறையில் சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவரும் 4 சிறுமிகள் வெளியில் விளையாட சென்றுள்ளனர். அப்போது ராஜமாணிக்கம் என்பவரின் மகன் மகாலிங்கம் (வயது 60) என்பவர் குழந்தைகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துள்ளார். மேலும் தன்னுடைய ஸ்மார்ட்போனில் சிறுமிகளுக்கு வலுக்கட்டாயமாக ஆபாசப்படங்களையும் காட்டியுள்ளார். தொடர்ந்து குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவர்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த சிறுமிகள் உடனடியாக தங்களது பெற்றோரிடம் இதைப்பற்றி கூறியுள்ளனர். பின்பு பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகாலிங்கம் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.







