தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி சமூக வலைதளங் களில் அவதூறு பரப்பியவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘தமிழகத்தின் நிதி துறை அமைச்சரை பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆகையால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற உத்தரவின் படி வழக்கு பதியபட்டுள்ளது.
மேலும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டிய தேவையில்லை” என வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்தார். இந்த வழக்கில் புகார்தாரர் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பில், வழக்கின் முழு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இறுதி விசாரணைக்காக, ஜூலை 19ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.







