காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்காக மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடி போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் நேற்று முன்தினம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவு பெற்றது. பின்னர் அனைத்து மாநில ஓட்டுப்பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டது. அனைத்து மாநில வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுகள் மொத்தமாக சேர்க்கப்பட்டு அதன் பின் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், சசிதரூர் ஆயிரம் ஓட்டுகளை பெற்றார். மல்லிகார்ஜுன கார்கே 7 ஆயிரத்து 897 ஓட்டுகள் பெற்று பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார்.
எண்ணப்பட்ட வாக்குகளில் 416 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே காந்தி குடும்பத்தின் ஆதரவை பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவே வெற்றி பெறுவார் என்றும், தலைமையின் ஆதரவும் அவருக்கே இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகின. ஆனால், யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று சோனிய காந்தியும், ராகுல்காந்தியும் தெரிவித்திருந்தனர்.
காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களே ஒவ்வொரு முறையும் போட்டியின்றி தலைவராக தேர்வாகி வந்தனர். ஆனால் இந்த முறை காந்தி குடும்பத்தார் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பாததால் தற்போது போட்டி நடத்தப்பட்ட நிலையில், மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.