ஆறு காங்கிரஸ் அரசாங்கங்களை பாஜக திருடிவிட்டதாகவும், ஆர்எஸ்எஸ்ஸை தலிபான்களுடன் ஒப்பிட்டும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பேசிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பஞ்சாபில் நடந்து வரும் பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக, நேற்று (19 வியாழன் அன்று) மேடையில் பேசிய கார்கே பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். அதில் குறிப்பாக பாஜக, ஆறு காங்கிரஸ் அரசாங்கங்களைத் திருடிவிட்டதாகவும்… அவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம், மற்றபடி இந்திய குடிமக்களின் நலனுக்காக எதையும் சிந்திக்கவோ செய்யவோ மாட்டார்கள் என்று கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் “எங்கள் கட்சியில் பலரை அவர்கள் (பாஜக) மிரட்டி அழைத்துச் சென்றுள்ளனர். மக்களே காங்கிரசை தேர்ந்தெடுத்தாலும் அதை நாசமாக்கி, சிலருக்கு பணம் கொடுத்தோ, சிலருக்கு பேராசை காட்டியோ, சிலரை அமலாக்க இயக்குனரகம், வருமான வரித்துறை, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் ஆகியவற்றின் கீழ் கொண்டு சென்று மிரட்டியோ தங்கள் பக்கம் இழுத்துவிட்டார்கள். அப்படித்தான் ஆட்சி செய்கிறார்கள். இனியும் அவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள், ”என்று கூறினார்.
இதுதவிர பாராளுமன்றம் தொடர்பான விஷயங்களில் விவாதம் நடத்தவில்லை என்றும், “சாக்குப்போக்கு” மூலம் அவையில் செல்வாக்கு செலுத்தியதாகவும் அவர் பாஜகவை கடுமையாக சாடினார். மேலும் பொதுமக்கள் தொடர்பான கேள்விகளுக்கு நாம் பாராளுமன்றத்தில் நிலைப்பாட்டை எடுக்கும்போதெல்லாம், அவர்கள் சில காரணங்களைச் சொல்லி அவையில் செல்வாக்கு செலுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்த அவர், தற்போது இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் அனைத்து தரப்பு மக்களும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதை கண்டும், யாத்திரையின் வெற்றியைக் கண்டும் பாஜக பதற்றமடைந்துள்ளதாக பேசினார்.
அதே போல் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுடன், ஆர்எஸ்எஸ்ஸை ஒப்பிட்டுப் பேசிய அவர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை ஆர்எஸ்எஸ் மதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதற்கு ஒப்பீடாக தாலிபான்கள் பெண்களை படிக்க விடாமல் எப்படி அழுத்தம் கொடுத்து துன்புறுத்துகிறார்களோ, அதே போல் மனுஸ்மிருதியிலோ ஆர்எஸ்எஸ்ஸிலோ பெண்களுக்கு இடமில்லை. பெண்கள் தாழ்வாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலை முன்பு இங்கே அப்படி இருந்தது இப்போதும் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவும் அதையே செய்ய முயற்சிக்கிறது”
என்று அவர் பேசினார்.