இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று புதிய தலைவராக மல்லிகார்ச்சுன கார்கே தற்போது தேர்வாகியுள்ளார். சற்றேறக்குறைய 137 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இது வரை 6 முறை மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது.
1938ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். காந்தியடிகளால் நிறுத்தப்பட்ட வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை நேதாஜி தோற்கடித்து தலைவர் பதவிக்கு வந்தார். ஆனாலும் உரிய ஒத்துழைப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், குறுகிய காலத்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நேதாஜி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1950ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புருசோத்தம தாஸ் வெற்றி பெற்றார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் ஆதரவாளரான இவர், முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆதரவாளராக அறியப்பட்ட ஆச்சார்ய கிருபாளினியை தோற்கடித்தார்.
1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரமானந்த ரெட்டி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், சித்தார்த் சங்கர் ரே, கரண்சிங் ஆகியோரை பிரமானந்த ரெட்டி தோற்கடித்தார். 1997ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சீதாராம் கேசரி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மூத்த தலைவர்கள் சரத் பவார், ராஜேஷ் பைலட் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
2000வது ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாத் சொற்ப வாக்குகளையே பெற்றார். 2017ம் ஆண்டு ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியா பொறுப்பேற்றார்.
2022 அக்டோர் மாதத்தில் தற்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மாநிலங்களவைக் குழு தலைவர் மல்லிகார்சுன கார்கே – திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால தலைவராக இருந்த சோனியா, அவருக்கு பின்னர் தலைவரான ராகுல் காந்தி இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. யாருக்கும் வெளிப்படையான ஆதரவும் அளிக்கவில்லை. ஆனால், கார்கேவிற்கே இருவரின் ஆதரவு என்று மூத்த தலைவர்களின் செயல்பாடுகள் உணர்த்தின. இதையடுத்து, இருவருக்கும் நெருக்கமான கார்கே தற்போது தலைவராகியுள்ளார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் கட்சித் தலைவராகியுள்ளார்.
இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று புதிய தலைவராக மல்லிகார்ச்சுன கார்கே தற்போது தேர்வாகியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் தோல்வியடைந்தார். ‘இந்த தேர்தல் உட்கட்சி ஜனநாயகத்தை எடுத்துச் சொல்லும் வகையில் நட்புரீதியிலான போட்டி. இருவரும் நண்பர்களாக தொடர்வோம்’ என்று சசிதரூர் தெரிவித்துள்ளார். எங்கள் நட்பு தொடரும். சோனியாவின் ஆலோசனைப்படியே செயல்படுவேன் என்று கார்கேவும் கூறியுள்ளார்.
தொடர் தோல்வி உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் தலைவராகியுள்ள கார்கே, சோனியா, ராகுலின் சொல்படிதான் நடப்பார். கட்சியில் சோனியா, ராகுல் செல்வாக்கே தொடரும். ஒருவருக்கு ஒரு பதவி என்கிற முடிவின் படி, கார்கே கட்சித் தலைவராகவும், ராகுல் அல்லது அவரின் ஆதரவு பெற்ற ஒருவர் பிரதமர் வேட்பாளராகவும் களம் இறங்குவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
நீண்ட அரசியல் அனுபவத்துடன் பொறுமைசாலி என்று பெயர் பெற்ற கார்கே, சோனியா, ராகுல் இருவரின் கைப்பாவையாக இருப்பாரா? அல்லது இருவரின் ஆலோசனைகளை மட்டும் பெற்றுக்கொண்டு, தனித்தன்மையுடன் செயல்படுவாரா? பார்க்கலாம்.
– செய்திப்பிரிவு