தமிழக சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் விரைவில் நடத்தப்பட உள்ள சூழலில் ‘‘சேவை பெறும் உரிமைச் சட்டத்தை’’ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: லஞ்ச, ஊழலைக் கட்டுப்படுத்துவதோடு, அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைத்திட வழிவகுக்கும் இச்சட்டத்தை நிறைவேற்றக் கோரி தமிழகம் எங்கும் மாவட்ட ஆட்சியரிடம் மனு, ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து நடத்தி வருவதை நினைவு கூர்கிறோம்.
மேலும், இச்சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஆளுங்கட்சியான திமுகவானது தேர்தல் வாக்குறுதி (வாக்குறுதி எண்: 19) கொடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள சேவை பெறும் உரிமைச் சட்டமானது அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழகத்திலும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








