சென்னையில் வெள்ளத்தை தவிர்க்க, மழைநீர் வடிகால்களில் தற்காலிக இணைப்பை ஏற்படுத்துங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகரத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவை முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால் அவற்றை விரைந்து முடிக்க வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நிறைவடைவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. வடகிழக்கு பருவமழை அடுத்த இரு வாரங்களில் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதுள்ள வேகத்தில் பணிகள் தொடர்ந்தால், சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் பருவமழைக்குள்ளாக இந்த பணிகள் நிறைவுபெறாது என்பதே உண்மை. 80 முதல் 85 % மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், உண்மையில் 60 – 65% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. அதிலும் பல இடங்களில் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எங்கெல்லாம் வடிகால்களை இணைக்க முடியுமோ அங்கெல்லாம் வடிகால்களை இணைப்பதன்மூலம் வெள்ள பாதிப்பை ஓரளவு தடுக்கலாம். புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் தங்கு தடையின்றி வெள்ள நீர் வெளியேறுவதை சோதனைகள் மூலம் உறுதி செய்ய வேண்டும். மேலும் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. விபத்துகளைத் தவிர்க்க அவற்றையும் விரைந்து சரி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.