அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான, உதவி விமானி ஜெயந்த் உடல் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், இரண்டு விமானிகள் உயிரிழந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானங்களில், உதவி விமானி ஜெயந்த் தேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் – மல்லிகா தம்பதியின் மகன் ஆவார்.
35 வயதான மேஜர் ஜெயந்த் 12 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செல்லசாராஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மனைவியுடன், அஸ்ஸாமில் உள்ள மிஸ்ஸமாரியில் குடியேறிய அவர், பணி நிமித்தமாக அங்கையே வசித்து வருகிறார். தற்போது மேஜர் ஜெயந்த்-செல்ல சாரா ஸ்ரீ தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை.
இந்த நிலையில், மேஜர் ஜெயந்தின் மறைவு, தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதி மக்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது உடல் இன்று மாலை ஜெயமங்கலத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.
இதனையும் படியுங்கள்: அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மதுரையை சேர்ந்த பைலட் உயிரிழப்பு…
மேஜர் ஜெயந்தின் உடல், அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில், அவரது உடலை பெறுவதற்காக, ஜெயந்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










