கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நாளை தொடங்கப்படவுள்ள நிலையில், தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் படிப்படியாக ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழஙகப்படும் என தெரிவிக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என அழைக்கப்படும இத்திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தை காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். . இந்த நிகழ்ச்சிக்காக 10 ஆயிரம் பயனாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர்
இதனிடையே தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் செலுத்தி மேசேஜ் அனுப்பி சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் பல பகுதிகளில் தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளிலும் படிப்படியாக ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.







