இந்தியாவில் தயாரான ஐபோன் 15 மாடல்: இங்கு தான் விலையும் அதிகம்!

ஐஃபோன் 15 மாடல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் விலை குறைவாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் விலை மற்ற நாடுகளை விட அதிகமாக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது. விலையுயர்ந்த போன்கள் வரிசையில் இருக்கும் ஆப்பிள்…

ஐஃபோன் 15 மாடல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் விலை குறைவாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் விலை மற்ற நாடுகளை விட அதிகமாக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விலையுயர்ந்த போன்கள் வரிசையில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது 7% ஸ்மார்ட் போன்களை தற்போது இந்தியாவில் தயாரிக்கிறது. இதில், ஐஃபோன் 15 மாடல்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐஃபோன் 15 மாடல்களின் விலை குறைவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், அமெரிக்கா, துபாய் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் தொகையை விட இந்தியாவில் அதன் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஐஃபோன் 15 மாடல் ரூ.79,900-க்கும், ஐஃபோன் 15 பிளஸ் ரூ.89,900-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மாடல் ரூ.1,34,900-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.1,59,900 -க்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால், ஐஃபோன் 15 மாடல் அமெரிக்காவில் ரூ.66,317 மற்றும் துபாயில் ரூ.76,817-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் அமெரிக்காவில் 99,517-க்கும் துபாயில் 1,15,237-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ்(1 டெரா பைட்) மாடல் இந்தியாவில் ரூ.1,99,000-க்கு விற்பனையாகும் நிலையில், அமெரிக்காவில் வெறும் ரூ.1,32,717-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது, இந்திய விலையைவிட 51% குறைவாகும்.

துபாயில் ஐஃபோன் தயாரிக்கவில்லை என்றாலும், இந்தியாவைவிட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறுவது, அமெரிக்கா மற்றும் துபாயைவிட இந்தியாவில் ஐஃபோன் வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைவாக இருப்பது என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் புதிய வகை மாடல்களை வாங்காமல் முந்தைய மாடல்களையே பெரிதும் வாங்குவதாக கூறப்படுகிறது.உதாரணமாக, கடந்தாண்டு வெளியான ஐஃபோன் 14 மாடல்கள், இந்தியாவிலிருந்து 54% பழைய மாடல்களையே வாங்கியுள்ளனர். அதேபோல், ஐஃபோன் 13 மாடல் வெளியானபோது வெறும் 23% பேர் மட்டுமே புதிய மாடலை தேர்வு செய்திருந்தனர். ஆனால், வெளிநாடுகளில் புதிய மாடல்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் அதிகளவிலான போன்கள் இறக்குமதி செய்யப்படுவதால் கூடுதல் சலுகைகளும் கிடைப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.