உசிலம்பட்டி அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் மூணாண்டி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த பாண்டி என்பவர் ஆண் கன்றுக்குட்டி ஒன்றை வாங்கி நேர்த்திக் கடனாக செலுத்தினார். மூணாண்டி எனும் பெயரிலேயே வளர்ந்த கன்றுக்குட்டி பிற்காலத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளையாக மாறி மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி இக்கிராமத்திற்கு பெருமைகளை தேடித் தந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதியுற்ற மூணாண்டி திடீரென உயிரிழந்தது. தங்களின் குல தெய்வமாக வலம்வந்த காளையின் இறப்பு சேதி அதிர்ச்சியடைந்த ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இறந்த மனிதருக்கு செய்யப்படும் இறுதி மரியாதை போன்றே மேளதாளம், கரகாட்டம் உள்ளிட்டவை நிகழ்வுகளுக்கு இடையே காளையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊர் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
–வேந்தன்