மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 15 ஆண்டுகளில் வசூலான உண்டியல் தொகை மட்டும் ரூ.100 கோடி என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரையின் ஆன்மீக அடையாளமாக மட்டுமன்றி, தொன்மைக்குரிய பெருமிதமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலைச் சார்ந்துள்ள பொருளாதாரம், மதுரையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் கோயிலின் உள்ளே பக்தர்கள் வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவற்றில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் மீண்டும் பழைய சுறுசுறுப்பை மீனாட்சியம்மன் கோயில் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
பக்தர்களின் காணிக்கையைப் பெறுவதற்கு கோயிலுக்குள், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளில், மீனாட்சியம்மன் கோயிலின் உண்டியலில் மட்டும் எவ்வளவு வசூலாகியுள்ளது என்பது குறித்து மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ தன்னார்வலர் முத்துப்பாண்டி, கோயில் நிர்வாகத்திடம் தகவல் கேட்டிருந்தார்.
அதில் வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கி
2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 100 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரத்து 913
ரூபாய் வசூலாகியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் பெருந்தொற்றுக் காலத்துக்கு சற்று முந்தைய ஆண்டான 2018-2019ல் மட்டும், அதிகபட்சமாக 9 கோடியே 82 லட்சத்து 84 ஆயிரத்து 220 ரூபாய் வசூலாகியுள்ளது.
கடந்த 2008-2009ல் ஆண்டில் மிகக் குறைவாக 3 கோடியே 44 லட்சத்து 48 ஆயிரத்து
221 ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் படிப்படியாக உண்டியல் வருமானம் அதிகரித்தே வருகிறது. இடையில் பெருந்தொற்றுக் காலங்களில் மட்டும் உண்டியல் வருமானம் கணிசமாக குறைந்துள்ளது.