மதுரை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், தங்க குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் உற்சாகமாக வழிபட்டனர்.
தென்னகத்தின் பெருவிழாவாக கொண்டாடப்படும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29 ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் , மே 2 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட வழிபாடுகளைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது.
தல்லாக்குளம் அழகர் பெருமாள் கோயிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் புறப்பட்ட கள்ளழகரை வழிநெடுக தீபங்கள் ஏற்றியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கோவிந்தா கோஷங்கள் முழங்கியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரவேற்றனர்.
கோரிப்பாளையம் அருகே வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக தங்கக் குதிரையில் பச்சை நிறப் பட்டுடுத்தி வந்த கள்ளழகரை, ஸ்ரீவீரராகவப்பெருமான் வரவேற்கும் வழிபாடு நடைபெற்றது. பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகையில் இறங்கினால், விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில், வைகை ஆற்றில் இறங்கினார். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்து பேரானந்தம் அடைந்தனர்.
அதன்பின்னர், ராமராயர் மண்டபத்துக்கு எழுந்தருளிய கள்ளழகர், அங்கு கருப்பண்ண சாமியிடம் ஆசிர்வாதம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அப்போது, கள்ளழகரை வரவேற்று மகிழ்விக்கும் விதமாக, சுவாமி மீது பக்தர்கள் தோல் பையில் வைத்து, தண்ணீர் பீய்ச்சி வழிபட்டனர். ஆண்டுக்கு இரண்டுமுறை மட்டுமே கருப்பண்ணசாமி கோயில் நடைதிறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நாளை தேனூர் வீரராவகப் பெருமாள் கோயிலுக்குச் சென்று கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதுகுறித்த முழு வீடியோவை நியூஸ்7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் காணுங்கள் :








