மதுரை செல்லூர் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் தனது பிறந்த நாளன்று வாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரவுடிகள்,சமூக விரோதிகள் பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டி அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் மதுரையிலும் அரங்கேறி உள்ளது.
தென்தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் செல்லூர் பகுதியிலுள்ள மீனாட்சிபுரம் சரஸ்வதி தியேட்டர் அருகேயுள்ள ஒரு திருமண மண்டபத்தில் திமுக கட்சியின் முக்கிய பிரமுகர் என கூறப்படும் முத்துமணி என்பவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.ஆட்டம்,பாட்டம் என களைகட்டிய பிறந்த நாள் விழாவில் அவரது ஆதரவாளர்கள் புடைசூழ பிறந்தநாள் கேக்கை நீண்ட வாளால் வெட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். செல்லூர் பகுதியில் இச்சம்பவம் அரங்கேறி உள்ளது காண்போரை பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது. பிறந்தநாள் போன்ற முக்கிய நாட்களில் கேக் வெட்டுவது தவறில்லை, ஆனால் வாள் போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டி,அதனை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது இளம்தலைமுறையினரை தடம் புரள செய்யும் என்பதே பொதுமக்களின் கவலையாக உள்ளது. எனவே இதனை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வேந்தன்