இரிடியம் முதலீடு எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ராம்பிரபுவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பால்பண்ணை உரிமையாளார் ராம்பிரபு என்பவர், ஆஸ்திரேலியாவில் இரிடியத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ராம்பிரபு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, பல்லாவரத்தை சேர்ந்த முகமது தமீம் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 20 லட்ச ரூபாயை பிணையத் தொகையாக செலுத்த வேண்டும் எனவும், மேலும் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பிணையமாக வழங்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








