துர்கா பூஜை, ஓணம் பண்டிகை முடிந்த பிறகு கொரோனா அதிகரித்தது போல தீபாவளி பண்டிகையின்போதும் ஆகிவிடக்கூடாது என மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பரப்புரையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.
நிகழ்வில் பேசிய மா.சுப்பிரமணியன், துர்கா பூஜை நடந்து முடிந்த 10 நாட்களில் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியது. ஜூன், ஜூலை மாதத்தில் கேரளாவில் குறையத் தொடங்கிய தொற்று ஓணம் பண்டிகைக்கு பிறகு உயர்ந்தது. துர்கா பூஜை போல, ஓணத்தைப் போல் தற்போது ஆகி விடக்கூடாது என்று தெரிவித்தார். பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர், கொரோனா நோயை விலை கொடுத்து வாங்குபவராக யாரும் மாறிவிட வேண்டாம். புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே ரங்கநாதன் தெருவிற்கு பொதுமக்கள் வர வேண்டும், தின்பண்டங்களை வாங்கி உண்ணக் கூடாது. குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்றார்.








