தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, கல்வித்துறை உயர் அலுவலர்கள், கல்வி நிலையங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆசோனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பு கொண்ட 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விடுதியில் மீதமுள்ள 471 நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்கும் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் 4 லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில் 18 வயதை தாண்டிய மாணவர்களில் 46 சதவிகிதம் பேர் மட்டுமே முதல் தவனை தடுப்பூசி போட்டுள்ளனர். 12 சதவிகிதம் பேர் இரண்டாம் தவனை தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்குபட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். தடுப்பூசி போட்டால் மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுத்தப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேருக்கு டெல்டா வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது மரபணு மாதிரிகள், புனே ஆய்வகத்திற்கு அனுபப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.








