தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு நடத்தி வரும் இந்த முகாம் மூலம், நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட் டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

அதன் மூலம் 2 கோடியே 43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று (11-ஆம் தேதி) நடைபெறுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருக்கிறது. சென்னையில் இதுவரை 10 லட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







