லூதியானாவில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் 2 வது மாடியில் இருக்கும் கழிவறையில் கடந்த 23 ஆம் தேதி பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதையடுத்து அந்த வளாகத்தின் சுவர்கள் இடித்து விழுந்தன. ஜன்னல் கண்ணாடிகள் சிதறின. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஐந்துக்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்ததாகவும் முதலில் கூறப்பட்டது. பின்னர் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்தவர் யார் என்ற தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் பஞ்சாப் போலீஸில் தலைமை காவலராக பணியாற்றிய ககன்தீப் சிங் என்றும் லூதியானாவின் கன்னா (Khanna) பகுதியை சேர்ந்த இவர், போதைப்பொருள் கடத்தல் வழக்கிலும், கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்ததாலும் 2019 ஆம் ஆண்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் கிடைத்த சிம்கார்டு, உடலில் பச்சைக் குத்திய அடையாளம் ஆகியவற்றின் உதவியுடன் அது ககன்தீப் சிங் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதுபற்றி பஞ்சாப் டிஜிபி சித்தார்த் சட்டோபத்யாயா கூறும்போது, இதில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள், தாதாக்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளோம். இதில் பெரிய சதி நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ககன் தீப்பிற்கு போலீஸ் சோதனைகளை தவிர்ப்பது எப்படி என்பது தெரியும். அவர் மின்னணு சாதனங்களை கையாள்வதில் சிறந்த அனுபவம் கொண்டவர். அவர்தான் வெடிகுண்டை நீதிமன்றத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். போலீசுக்கு எதிரான கோபத்தில் அவர் இதை செய்திருக்கலாம். இதன் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.