அதி வேகமாக சென்று வரும் மணல் லாரிகளால் விபத்து ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நல்லம்பல் ஏரியில் மணல் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு தூர்வாரப்படும் மணல்களை லாரிகள் மூலம் காரைக்கால் பேரளம் ரயில் பாதைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தினம் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகள் சேத்தூர், தென்னங்குடி, செல்லூர், திருநள்ளாறு வழியாக கொண்டு செல்லப்படுகின்றனர்.
மேலும் மணல் ஏற்றி வரும் லாரிகள் சாலைகளில் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிவேகமாக சென்று வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் லாரியின் வேகத்தை குறைக்காமல் சென்று வருவதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
லாரியின் மூலம் மணல்களை சரியான முறையில் எடுத்து செல்லாததால் மணல்கள் சாலையில் கொட்டியும், காற்றில் பறந்தும் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இந்த லாரிகளால் பெரு அசம்பாவிதம் நடக்கும் முன்பே அதனை தடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







