உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பின் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பாஜக மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை காலை 10 மணிக்கு கமலாலயத்தில் நடைபெறுகிறது. அண்ணாமலை மாநில தலைவரான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்துவது பற்றியும் நாளை முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.