உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் டிசம்பர் 3 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், மூன்று ஆண்டுகள் கழித்து 2019 டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதுவும் ஊரகப் பகுதிகளுக்கும் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. உள்ளாட்சிப் பதவிகளில் தற்போது பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் இன்று சந்தித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் வாக்குறுதியை அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அத்துடன், 2ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு பணி நிரந்தரம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை 5,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த 32 கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தியும் மனு அளித்தார்.