உள்ளாட்சித் தேர்தல்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதே சமயம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களே நடத்தி வருகின்றன.
இதனிடையே தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்ததாக தேசிய மக்கள் கட்சியின் எம்.எல் ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவர்களை தகுதி நீக்கம் செய்யவும் கோரிக்கை வைத்திருந்தார். 
இந்த மனு நீதிபதி யு.யு.லலித் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை போலவே உள்ளாட்சித் தேர்தல்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதே வேளையில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டனர்.







