கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2017- ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழியான சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர் தலைமையிலான
தனிப்படை போலீஸார் இதுவரை சசிகலா, விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஆறுகுட்டி உள்பட 230-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனிடையே கோவையைச் சேர்ந்த ஓ.ஆறுமுகசாமி என்பவரது மகனும் செந்தில் பேப்பர்ஸ் அன்ட் போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான செந்தில்குமாரிடம் அண்மையில் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக பாண்டிச்சேரி Ocean spray resort உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவரிடம் போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீஸார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து இன்று விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்கனவே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-ம.பவித்ரா