அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் ( 2022-23 ) அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும், வகுப்புகளை நடத்த தகுதி வாய்ந்த சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடி கட்டடங்களில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அண்மைச் செய்தி: ‘ஸ்னாப்சாட் யூசரா நீங்கள்? உங்களுக்கான செய்திதான் இது’
முதற்கட்டமாக 2,500 சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்யவும், சிறப்பாசிரியர் நியமனத்தில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ( DEE ) படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு வரும் விஜயதசமிக்குள்ளாக எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் செயல்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், 5000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாகப் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது பலரது தரப்பில் பாராட்டைப் பெற்று வருகிறது.








