”இருளை ஒளி வெல்லும், தீமையை நன்மை வெல்லும்” : இறப்பு வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து……….!

இறப்பு வதந்திகளுக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகு, ஈரான் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரான் நாட்டு உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார். அதே போல இஸ்ரேல் , அமெரிக்கா தரப்பிலும் எதிர்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் மாறி மாறி நடத்தப்படும் தாக்குதலில் ஏராளமான உயிரிழப்பு மட்டுமின்றி பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் ஒன்றில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவின. இதனை தொடர்ந்து வெளியான நெதன்யாகு தாம் உயிருடன் இருப்பதாக கூறும் ஒரு வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பிரேமில், அவரின் கையில் 6 விரல்கள் இருப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. இதனால் நெதன்யாகுவின் மரணம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன; மேலும் இக்காணொளி செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் சர்ச்சை கிளம்பியது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகு, ஈரான் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் அந்நாட்டு மக்களுக்கு நவ்ரூஸ் (ஈரானிய புத்தாண்டு) மற்றும் நெருப்பு திருவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் அவர், “ஈரானின் வீரமிக்க மக்களுக்கு, ஒளித் திருவிழாவுடன் தொடங்கும் இந்த விடுமுறைக்காலம் இனியதாக அமைய நான் ஒவ்வொரு ஆண்டும் வாழ்த்துவதைப் போலவே, வாழ்த்துகிறேன். இருளை ஒளி வெல்லும், தீமையை நன்மை வெல்லும்’ என்ற ஈரானிய மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கையை இது குறிக்கிறது. இந்த ஆண்டு, இந்தப் பண்டிகைக்கு ஒரு சிறப்பு அர்த்தம் உள்ளது. இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் அனைவருக்கும் சுதந்திரமான ஆண்டாகவும், நம்பிக்கையின் புதிய தொடக்கமாகவும் திகழ நவ்ரூஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.