”அதானிக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்புகள் தவறாகப் பயன்படுத் தப்பட்டுள்ளது”- காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!

அதானி குழுமத்தின் நலனுக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ்  குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மோடி மற்றும் அதானி (மோதானி) ஆகியோரின் கூட்டு முயற்சியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் (LIC) அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு  தவறாகப் பயன்படுத்தியது என்பது குறித்து ஊடகங்களில்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 2025 இல் பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் சுமார் 33,000 கோடி ரூபாய் LIC நிதியை முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் வரைவு செய்து செயல்படுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. “அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது” மற்றும் “பிற முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது” ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

இந்த மோதானி மெகா மோசடி முழுமையையும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது வருகிறது. இது தொடர்பாக 100 கேள்விகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.

முதல் படியாக, குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவானது (PAC) LIC எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயப்ப்டுத்தப்பட்டது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.