இந்தியாவின் சட்டத்துக்கு இணங்க வேண்டும்: டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மதிக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு…

டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மதிக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு இணக்கமாக சமூக வலைதளங்கள் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய சட்டத்தின் விதிமுறைகள் கடந்த மே 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன் படி கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் விதிகளுக்கு இணங்க தங்களது வலைதளத்தில் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு வந்தனர்.

காலக்கெடு முடிவடைந்தும் டிவிட்டர் தரப்பில் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு டிவிட்டர் நிறுவனம் இதுவரை தனது இணக்கத்தை தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த அதிகாரி ஒருவரை குறைதீர் அதிகாரியாகவும் டிவிட்டர் நிறுவனம் இன்னும் நியமிக்கவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் புதிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவின் சட்டத்தை ஒவ்வொருவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.