மாணவர்களுக்கு மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது.…

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்,நிலைமை சீரடைந்த பிறகும் இன்று வரை மடிக்கணினி வழங்கப்படாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய கல்விச் சூழலில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிகணினிகள் மிகவும் அவசியமானவை. ஆனால் ஏழை மாணவர்களால் அதை விலை கொடுத்து வாங்க முடியாது. 2020-21 ம் ஆண்டுகளில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ள ராமதாஸ்,
“நடப்பு ஆண்டில் ஐந்தரை லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட வேண்டும் ஆனால் அதற்கான ஆயத்த பணிகள் நடக்கவில்லை. மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது எனவும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.