நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை முழுவதுமாக தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இருந்த பிரச்னையில், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி, நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கில் கைதான ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், திருச்சியில் தங்கியிருந்து இரு வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும், அதன்பின்னர் சென்னையில் திங்கட்கிழமைதோறும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கியது.
அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி வந்தநிலையில், ஒவ்வொரு மாதமும்
முதல் மற்றும் மூன்றாவது வார திங்கட்கிழமைகளில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனை நிபந்தனையையும் தளர்த்தக்கோரி ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
தான் ஆஜராகும்போது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகளவில்
கூடுவதால், தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னை மற்றும் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு விதிக்கபட்ட நிபந்தனையை முழுவதுமாக தளர்த்தி உத்தரவிட்டார்.
-மணிகண்டன்








