குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் 4ஆம் நாள், அம்பாளின் வீதி உலாவோடு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த தசரா திருவிழா கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
தொடர்ந்து பத்துநாட்கள் நடைபெறக்கூடிய தசரா திருவிழாவில், நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் 4ஆம் நாளான இன்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அம்பாள் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் குலசேகரன்பட்டினம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் 5ஆம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.








