சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கொலப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஞான ரத்தினம். இவருடைய மகன் சின்ன குட்டி என்ற கிருஷ்ணசாமி (29). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மாவு அரைப்பதற்காக கொளப்பள்ளி சுடுகாடு பக்கம் நடந்து சென்றபோது ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் தேவாலா அனைத்து மகளிர் போலீசார் கிருஷ்ணசாமி மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் நீதிபதி நாராயணன், குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ணசாமி சிறுமியை கடத்தி சென்றதற்காக 5 ஆண்டுகளும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டுகள் என மொத்தம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து ஜாமினில் வெளியில் இருந்த கிருஷ்ணசாமி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
-ம.பவித்ரா








