பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 14,500 க்கும் மேற்பட்ட பள்ளி்கள் தரம் உயர்த்தப்படும்.
“கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் PM-SHRI பள்ளிகளாக உருவாக பலப்படுத்தப்படும்” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தெரிவித்தார்.
இதற்கான அறிவிப்பை செப்டம்பர் 5ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில், ஆசிரியர் தினமான இன்று ஒரு புதிய முயற்சியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . “ பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டம் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பயனளிக்கும் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்ட அவர் இந்த பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாறும் எனவும் தேசிய கல்வி கொள்கையின் முழு உணர்வையும் இந்த திட்டம் உள்ளடக்கியது எனவும் பதிவிட்டார். மேலும் நவீன தொழில்நுட்பம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பலவற்றில் கவனம் செலுத்தப்படும்” எனவும் தெரிவித்தார்.
இந்த பள்ளிகள், ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு உபகரணங்கள், கலை அறை உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகளுடன், உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடியதாக இருக்கும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.” மேலும் குழந்தைகளின் பன்மொழித் தேவைகள் மற்றும் பல்வேறு கல்வித் திறன்களைக் கவனித்து, அவர்களின் சொந்தக் கற்றலில் அவர்களைச் சுறுசுறுப்பான பங்கேற்பாளர்களாக மாற்றும் உயர்தரக் கல்வியை வழங்குவதற்காக இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜூன் மாதம், காந்திநகரில் நடந்த பள்ளிக் கல்வி அமைச்சர்களின் தேசிய மாநாட்டின் போது, பிரதம மந்திரி பள்ளி யோஜனா பள்ளிகள் தேசிய கல்வி கொள்கையின் ஆய்வகமாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.






