கனடா தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து, கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நேரில் ஆஜராக வெளியுறவு அமைச்சகம் சம்மன் வழங்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் இன்று காலை ஆஜரான கேமரூனை 5 நாள்களுக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்துள்ளது. கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.