பாம்புகளைப் பிடிக்க வாவா சுரேஷுக்கு லைசன்ஸ் வழங்க கேரள வனத்துறை முடிவு!

பாம்புகளைப் பிடிக்க வாவா சுரேஷுக்கு லைசன்ஸ் வழங்க கேரள மாநில வனத்துறை முடிவு செய்துள்ளது.  பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், கேரளத்தில் தனி ஒரு மனிதராக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த 50,000-க்கும்…

பாம்புகளைப் பிடிக்க வாவா சுரேஷுக்கு லைசன்ஸ் வழங்க கேரள மாநில வனத்துறை முடிவு செய்துள்ளது. 

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், கேரளத்தில் தனி ஒரு மனிதராக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த 50,000-க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு பத்திரமாக வனத்தில் விட்டவர் வாவா சுரேஷ்.  கொடிய விஷத்தன்மையுள்ள பாம்புகளையும் லாவகமாகப் பிடித்து மக்களுக்கு அதன் பண்புகளைக் கூறி, பாம்புகளைக் கொல்லக் கூடாது என்கிற அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு கோட்டயம் மாவட்டம் சங்கனச்சேரி பகுதியில் உள்ள குரிச்சி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்த நல்லபாம்பை மீட்கச் சென்ற போது பொதுமக்கள் முன்னிலையில் சுரேஷின் தொடைப் பகுதியில் பாம்பு கடித்தது. இதனால், உடனடியாக அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு, மிக ஆபத்தான கட்டத்தில் இருந்தவர் உயர் சிகிச்சைகளால் மீண்டு வந்தார்.

இந்நிலையில்,  வாவா சுரேஷுக்கு கேரள மாநில வனத்துறை பாம்புகளைப் பிடிப்பதற்கான உரிமத்தை(லைசன்ஸ்) வழங்க முடிவு செய்துள்ளது.  முன்னதாக, வாவா சுரேஷ் அறிவியல் பூர்வமாக பாம்புகளைப் பிடிப்பதில்லை என வனத்துறை அதிகாரிகள் கூறி வந்ததால் அவருக்கு உரிமம் வழங்கப்படமால் இருந்தது.  வனத்துறையிடம் உரிமம் பெறாமல் பாம்புகளைப் பிடித்தால் 3 – 7 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படும் என்பது தண்டனைச் சட்டம்.  ஆனால், உரிமம் இல்லாமலே கடந்த 30 ஆண்டுகளாக வாவா சுரேஷ் பாம்புகளைப் பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.