பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் அனைத்து மக்களுக்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கூறி வருகிறது. அதாவது, அனைத்து மதத்தை சோ்ந்தவா்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக நாடு முழுவதும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. ஆனால் பொதுசிவில் சட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், பழங்குடிகள், சிறுபான்மையினா், பல்வேறு சமூக அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள சட்டப் பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். பொது சிவில் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கேரள சட்டப்பேரவையில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணியும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக உள்ளதால் சட்டப்பேரவையில் ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.







